

அல்-குவைதா தலைவர் ஒசாமா பின்லாடனை அமெரிக்கப் படைகளுக்கு காட்டிக் கொடுத்த டாக்டர் ஷகீல் அப்ரிடி, நாட்டின் சட்டப்படி தான் விசாரிக்கப்படுகிறார் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. கடந்தாண்டு மே 2ம் திகதி பாக். அபோதாபாத்தில் ஒசாமா பின்லாடன் அமெரிக்கப் படைகளால் கொல்லப்பட்டார்.
ஒசாமா இருந்த இடம், அமெரிக்கப் படைகளுக்குத் தெரிவதற்கு, பாகிஸ்தானைச் சேர்ந்த டாக்டர் ஷகீல் அப்ரிடி கொடுத்த உளவுத் தகவல்கள் தான் காரணம் என தெரியவந்துள்ளது. அந்த அடிப்படையில் அப்ரிடியை பாக். பொலிசார் கைது செய்தனர்.
ஆனால் இந்தக் கைதுக்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. சமீபத்தில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன் அளித்த பேட்டியில், காரணமே இல்லாமல் அப்ரிடியை பாக்.பொலிசார் கைது செய்துள்ளதாக விமர்சித்தார்.
இதற்குப் பதிலளிக்கும் விதத்தில், வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அப்துல் பசித் கூறுகையில், "அப்ரிடி சட்டப்படி தான் நடத்தப்படுகிறார். சர்வதேச சமூகம் பாக். மீது ஆதாரமில்லாத குறைகளைக் கூறுவதையும் முன்கூட்டியே முடிவுகளுக்கு வருவதையும் கைவிட வேண்டும்” என்றார்.